நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்தத் தயங்குவது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்தத் தயங்குவது ஏன்? - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதம் நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத்தை எப்படிக் கையாளுவது என்றே தெரியாமல் மத்திய அரசு விழித்துக் கொண்டு உள்ளது. விலை உயர்வு, லக்கிம்பூர் கெரி கலவர விவகாரம், விவசாயிகளுக்கு குறைந்தபட்சஆதரவு விலை சட்டம், லடாக்,பெகாசஸ், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் விவகாரம் போன்றவை குறித்து நாங்கள் பிரச்சினைகளை எழுப்பி வருகிறோம். இதுகுறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயங்குகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இதை சகித்துக் கொள்ள மாட்டோம். அதனால்தான் நாங்கள்இங்கு வெளியே வந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மக்களவை, மாநிலங்களவையை நாங்கள் நடத்தவிடவில்லையென்று ஆளுங்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். அவையை சுமுகமாக நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை விடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குரலை அரசு ஒடுக்கப் பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in