

ஜேஎன்யூ சர்ச்சை தொடர்பான 7 வீடியோக்களில் 2-ல் சிலரது குரல்களை புதிதாகப் பதிவு செய்து சேர்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்டப்பது தடயவியல் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சி தொடர்பாக மாநில அரசுக்கு 7 வீடியோ பதிவுகள் கிடைத்தன. அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தும்படி டெல்லி அரசு கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது.
அரசு உத்தரவுக்கு இணங்க நடத்தப்பட்ட ஆய்வில், 7 வீடியோக்களில் இரண்டு வீடியோக்களில் சிலரது குரல்களை புதிதாக பதிவு செய்து சேர்க்கப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை டெல்லி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ட்ரூத் லேப்ஸ் (Truth Labs) தான் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தது. அதில், 2 வீடியோக்களில் புதிதாக குரல் பதிவு இணைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மற்ற 5 வீடியோக்களும் உண்மையானவை என்பதும் உறுதியானது.
மாணவர்களிடம் விசாரணை:
கடந்த மாதம் (பிப்ரவரி 9) ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்தில் அப்சல் குருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அனிர்பன் பட்டாச்சார்யா, அசுதோஷ் குமார், உமர் காலீத் ஆகிய 3 மாணவர்கள் டெல்லி போலீஸில் சரணடைந்தனர். மாணவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.