Last Updated : 20 Dec, 2021 02:02 PM

 

Published : 20 Dec 2021 02:02 PM
Last Updated : 20 Dec 2021 02:02 PM

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்

நடிகை ஐஸ்வர்யா ராய் | கோப்புப்படம்

புதுடெல்லி: பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்குவதற்கும், வாங்குவதற்கும் உதவி செய்வதுதான பொன்சேகா நிறுவனத்தின் பணியாகும்.

இந்த நிறுவனத்திலிருந்து ரகசிய ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 80 நாடுகளைச் சேர்ந்த 107 பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்து இந்த ஆவணங்களை வெளியிட்டனர்.

உலகம் முழுவதும் லட்சத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கணக்கில் வராத சொத்துகளைப் பதுக்கியுள்ளார்கள் என்பது ஆவணங்கள் வாயிலாகத் தெரியவந்தது. ‘பனாமா பேப்பர்ஸ்’ பட்டியலில் இடம்பெற்ற ஐஸ்லாந்து பிரதமர் சிக்முண்டூர் டேவிட் குன்லாக்ஸன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி இழந்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஊழல் விவகாரத்தில் சிக்கினர்.

இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நேரில் ஆஜராகக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. மும்பை அமலாகக்கப் பிரிவு அலுவலகத்தில் இன்று பிற்பகலில் ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராகக் கோரப்பட்டுள்ளது. ஆனால், தன்னால் இன்று ஆஜராக முடியாது, வேறு ஒருநாளில் ஆஜராகிறேன் என்று அமலாக்கப் பிரிவுக்கு ஐஸ்வர்யா ராய் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் 1999-ன் கீழ் ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இதேபோன்று சம்மன் ஐஸ்வர்ய ராய்க்கு அனுப்பப்பட்டது, ஆனால், அப்போது அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராகவில்லை.
இந்த பனாமா பேப்பர்ஸ் ஊழலில் 300 இந்தியர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளன. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்கள் மீது வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x