Last Updated : 18 Dec, 2021 09:46 AM

 

Published : 18 Dec 2021 09:46 AM
Last Updated : 18 Dec 2021 09:46 AM

18 வயதில் வாக்களிக்கலாம் என்றால், திருமணம் மட்டும் ஏன் கூடாது? சமாஜ்வாடி எம்.பி. பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 என உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், வாக்களிக்கும் உரிமையை 18 வயது நிரம்பியவர்களுக்கு அளிக்கும்போது திருமணத்துக்கு மட்டுமே ஏன் தடை விதிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி எம்.பி. சையீது துஃபாலி ஹசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் திருமண வயதாக ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 எனத் தற்போது உள்ளது. இதில் பெண்களின் திருமண வயதையும் ஆண்களைப் போல் 21 வயது என உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில், ஊட்டச்சத்திலிருந்து பெண்களைக் காக்க அவர்களுக்குச் சரியான வயதில் திருமணம் நடைபெறுவது அவசியம் என்ற கருத்து நிலவி வந்தது. இதற்கான மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், சமாஜ்வாடி எம்.பி. சையீது துஃபாலி ஹசன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "பெண்ணின் கருத்தரிக்கும் வயது 16, 17 வருடங்கள் முதல் 30 வருடங்கள் வரை இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு சராசரியாக 16 வயதில் இருந்து திருமணத்துக்கான வரன் வரத் தொடங்குகிறது. திருமணம் தள்ளிப்போனால் இரண்டு பாதகங்கள் ஏற்படுகிறது. ஒன்று பெண்ணுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

இன்னொன்று பெற்றோருக்கு அதிக வயதானதுபோதும் குழந்தைகள் மாணாக்கர் பருவத்தில் இருக்கும் சூழல் உருவாகிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாத்தில் இருக்கும்போது குழந்தைகள் இன்னும் மாணவர்களாக இருப்பது வருந்தத்தக்கது. இயற்கையின் நியதிக்கு எதிராக நாம் செயல்படுகிறோம்.

கருத்தரித்தலுக்கான உடல் ரீதியான அந்தஸ்தைப் பெரும் போது ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். 16 வயதில் பூப்பெய்தினால் 16லேயே திருமணம் செய்யலாம். 18 வயதில் ஒரு பெண் வாக்களிக்கலாம் என்றால் 16 வயதில் ஏன் திருமணம் செய்யக்கூடாது" என்று வினவியுள்ளார்.

இதேபோல் சமாஜ்வாடி கட்சியின் இன்னொரு எம்.பி.யான ஷஃபிகூர் ரஹ்மான் பர்க், இந்தியா ஒரு ஏழை நாடு. அதனால், இங்கே அனைவரும் தங்களின் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்துவைக்க விரும்புகின்றனர். அதனால், நான் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்ப்பேன் எனக் கூறியுள்ளார்.

அதேவேளையில், ராஜ்யசபா எம்.பி. ஜெயாபச்சன் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். பெண்கள் கல்வி கற்கவும், அவர்கள் தங்களின் சுதந்திரத்தை அனுபவிக்கவும், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறவும் இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x