Published : 17 Dec 2021 10:47 AM
Last Updated : 17 Dec 2021 10:47 AM

ஒமைக்ரான் வைரஸ் மனிதர்களின் நுரையீரலை உடனே பாதிக்காது: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: ஒமைக்ரான் வைரஸ், உண்மையான சார்ஸ் கோவிட்டை விடவும், டெல்டா வைரஸை விடவும் வேகமாகப் பரவும், பன்மடங்கு பிரதியெடுத்துப் பெருகும் என்றாலும் மனிதர்களுக்கு பாதிப்பை உடனடியாக ஏற்படுத்தாது. குறிப்பாக நுரையீரலின் கீழ்ப்பகுதியை உடனடியாக பாதிக்காது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அடுத்த சில நாட்களில் மனிதர்களின் நுரையீரலை மிக மோசமாக பாதித்துவிடும். அந்த அளவோடு ஒப்பிடும்போது, 10 மடங்கு குறைவான பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எல்கேஎஸ் மருந்துத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், தீவிரத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மனிதர்களின் இரு நுரையீரல்களும் சுவாசக் குழாயின் முனையில் ஒவ்வொரு நுரையீரலிலும் ஒரு 'y' போலப் பிரிகின்றன. முந்தைய கரோனா வைரஸ் அதாவது டெல்டா வைரஸுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலுக்குள் ஆழமாக ஏன் முன்னேறுவதில்லை என்பது குறித்துக் கட்டுரையில் விளக்கவில்லை. இன்னும் அதுகுறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நுரையீரலில் இருந்து நுரையீரல் திசுக்களைப் பிரித்தெடுத்து அதில் ஒமைக்ரான் உருமாற்றத்தை மட்டும் ஆய்வாளர்கள் பிரித்தெடுத்துள்னர். டெல்டா வைரஸிலிருந்து, ஒமைக்ரான் வைரஸ் எவ்வாறு மாறுபட்டது, எந்த அளவு பாதிப்பைத் தருகிறது, தரவில்லை என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அதில் டெல்டா வைரஸை விடவும், உண்மையான சார்ஸ் கோவிட்டை விட பிரதி எடுப்பதில் 70 மடங்கு வேகமாக ஒமைக்ரான் செயல்படுகிறது. ஆனால், நுரையீரல் திசுக்களைப் பிரதியெடுப்பதில் சார்ஸ் கோவிட்டை விட 10 மடங்கு குறைவாகவே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே நுரையீரலை ஒமைக்ரான் உடனடியாக பாதிக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறையின் இணைப் பேராசிரியர் மருத்துவர் மைக்கேல் சான் சீ-வாய் கூறுகையில், “ஒமைக்ரான், டெல்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின் மனிதர்களால் எளிதாக சுவாசிக்க முடியாததற்கு காரணங்கள் உண்டு. வைரஸ் தன்னைப் பிரதி எடுப்பதில் மட்டும் நோயின் தீவிரம் தீர்மானிக்கப்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப் பொறுத்தும் அமைகிறது.

ஒமைக்ரான் வைரஸ் குறைவான சக்தியுடைய கிருமியாக இருந்தாலும், அதிகமான மக்களை பாதிக்கும்போது, நோயின் தீவிரம் அதிகமாகி, உயிரிழப்பையும் அதிகரிக்க வைக்கும். எங்களின் ஆய்வில் ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசி அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கிறது. ஏற்கெனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தாலும் அதிலிருந்து தப்பிக்கிறது எனத் தெரியவந்துள்ளது. எப்படியாகினும், ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த அச்சுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 73 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் இருந்துவரும் தகவலின்படி, ஒமைக்ரான் தொற்று வேகமாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒமைக்ரானுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முந்தைய வைரஸ் வகைகளைவிட 20-40 மடங்கு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால், கரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

பிரிட்டனில் மட்டும் 10 ஆயிரம் பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். நாள்தோறும் பிரிட்டனில் நோய்த்தொற்று 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி அமைப்பின் இயக்குநர் அனுராக் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சார்ஸ் கோவிட் குறித்த எங்கள் ஆய்வில் சுவாரஸ்யமான திருப்புமுனை கிடைத்துள்ளது. அதாவது டெல்டா வைரஸ், உண்மையான சார்ஸ் கோவிட்டை விட, ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவுதான். ஆனால், காற்றில் பரவுவதும், பிரதி எடுப்பதும் வேகமாக இருக்கும். நுரையீரலின் மேல்சுவாசப் பகுதியைத்தான் பாதிக்கும் என்பதால், சாதாரண ஜலதோஷம், நிமோனியா இருக்கும். இருப்பினும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x