Last Updated : 15 Dec, 2021 03:20 PM

 

Published : 15 Dec 2021 03:20 PM
Last Updated : 15 Dec 2021 03:20 PM

புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் மாநிலங்களை கட்டுப்படுத்தாது: மனுதாரர் புதிய வாதம்; கிருஷ்ணஜென்மபூமி வழக்கில் திருப்பம்

புதுடெல்லி: மத்திய அரசின் புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என கிருஷ்ணஜென்மபூமி வழக்கின் மனுதாரர் புதிய கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரா நீதிமன்றத்தில் இந்த புதிய கோரிக்கையினால், கோயில் நிலவழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் தெய்வீகநகரமான மதுராவில் கிருஷ்ணஜென்மபூமி கோயில் உள்ளது.

இந்த இடத்தில் தான் தமது கடவுளான கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு இருந்த பழமையாக கிருஷ்ணர் கோயில் சுமார் 400 வருடங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.

இதை முகலாயப் பேரரசரி அவுரங்கசீப்பின் உத்தரவால் இடிக்கப்பட்டு அதன் பாதி நிலைத்தில் ஷாயி ஈத்கா கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகவும் புகார்கள் உள்ளன.

இதை குறிப்பிட்டு அப்பகுதியின் இந்துக்கள் மசூதியின் நிலத்தை கோயிலிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கூறி வந்தனர். அதன் பிறகு இப்பிரச்சனையில் இந்து-முஸ்லீம் தரப்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி அக்கோரிக்கை கைவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோயிலுக்காக பாபர் மசூதி மீதான விவகாரம் போல், மதுரா உள்ளிட்ட மற்ற இடங்களிலும் வந்துவிடும் அச்சம் எழுந்தது. இதை தடுக்க காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பிரதமர் நரசிம்மராவ், புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 ஐ அமலாக்கினார்.

இச்சட்டத்தின்படி, சுதந்திரத்திற்கு பின் நாட்டின் அனைத்து மதத்தின் புனிதத்தலங்களை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது எனவும், அதன் மீதான வழக்குகளை நீதிமன்றங்களிலும் தொடுக்க முடியாது என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், சுதந்திரத்திற்கும் முன்பாக நடைபெற்ற வழக்கால் இச்சட்டத்திலிருந்து அயோத்தி நிலவழக்கிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த நவம்பர் 9, 2018 இல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதித்தது.

இந்த தீர்ப்பிற்கு பின் மதுராவின் நிலப்பிரச்சனை மீண்டும் எழத் துவங்கியது. இங்குள்ள கியான்வாபி மசூதியினுள் கிருஷ்ணர் சிலை வைத்து பூஜிக்க இந்து அமைப்புகள் முயன்றன.

இவர்கள் அளித்த அறிவிப்பால் கடந்த டிசம்பர் 6 இல் மதுரா முடுவதிலும் பதட்டம் நிலவியது. இதற்கு முன்பாக மதுரா நீதிமன்றத்தில் மசூதி அமைந்த 13.37 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், மனுதாரர் தரப்பில் ஒரு புதிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், மதுராவின் நிலவழக்கில் புதிய திருப்பம் நேரும் வாய்ப்புகள் எழுந்துள்ளன

இதுகுறித்து கிருஷ்ணஜென்மபூமி தரப்பு வழக்கி வழக்கறிஞரான விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, ‘‘புனிதத்தலங்களுடன் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை காப்பது மாநில அரசுகளின் கடமை.

இதன் மீதான சட்ட, திட்டங்களை வகுக்க மாநில அரசுகளுக்கு மட்டுமே உரிமை உண்டு. இச்சூழலில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிட்டு புனிதத்தலங்களுக்காக 1991 இல் ஒரு சட்டம் இயற்றியது தவறானது.

இது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே, மத்திய அரசுன் 1991 இல் இய்ற்றிய சட்டத்தை ரத்து செய்து, செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மதுராவின் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் எடுத்துரைத்துள்ளோம்.’’ எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை அடுத்து வரும் ஜனவரியில் வரவிருக்கிறது. அப்போது முஸ்லிம்களின் தரப்பில் மதுரா நிலவழக்கில் ஆஜராகி வாதிட உள்ளனர்.

இதேபோல், மத்திய அரசின் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்திலும் அளிக்கப்பட்டுள்ளது. இதை பாஜகவின் ஆதரவாளரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யா அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x