

அயோத்தி: பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இன்று அயோத்தியில் வழிபாடு நடத்தினர்.
வாரணாசியில் கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வாரணாசியில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, பாஜக ஆளும் 17 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, அமைப்புச் செயலாளர் சந்தோஷ் மற்றும் கட்சியின் உ.பி., காசி மண்டலப் பிரிவுகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதுமட்டுமின்றி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர்கோயிலுக்கு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் டிசம்பர் 15ஆம் தேதி செல்வது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இன்று அயோத்திக்கு சென்றுள்ளனர்.
மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் அயோத்தியில் சரயூ நதிக்கரையில் பூஜை செய்தனர். பின்னர் அனுமன் கோயிலிலும் வழிபாடு நடத்தினர்.