மகாராஷ்டிராவில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று: 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்

மகாராஷ்டிராவில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று: 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் யாருமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர் அல்ல. ஒருவர் மட்டுமே பெங்களூரு சென்று திரும்பியவர்.

மேலும் இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை 28 ஆக உள்ளது. நாடு முழுவதும் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட 28 பேரில் 12 பேர் மும்பை, 10 பேர் பிம்ப்ரி சின்ச்வாட், கல்யாண், டோம்பிவல்லி, நாக்பூர், லட்டூர், வசாய் விரார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர்.

பாதிக்கப்பட்டவர்கள் 24 வயது முதல் 41 வயதுடையவர்களாக இருக்கின்றனர். மேலும் அனைவருமே மிதமான அறிகுறிகள் கொண்டவர்களாக உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்ப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 63 நாடுகளில் பரவிவிட்டது.டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் தடுப்பாற்றலையும் இந்த வைரஸ் குறைக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் தென் ஆப்பிரி்க்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும்பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் தடையும் விதித்துள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in