தமிழகத்தில் உள்ள மத்திய திறன்மேம்பாட்டு மையங்களில் பயனடைந்தோர் 10.39 லட்சம் பேர்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்

தமிழகத்தில் உள்ள மத்திய திறன்மேம்பாட்டு மையங்களில் பயனடைந்தோர் 10.39 லட்சம் பேர்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்
Updated on
1 min read

தமிழகத்திலுள்ள மத்திய அரசின் திறன்மேம்பாட்டு மையங்களில் இதுவரை 10.39 லட்சம் பேர் பலனடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதை மக்களவையில் இன்று மத்திய சுயதொழில் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக சேலம் மக்களவை தொகுதியின் திமுக எம்.பியான எஸ்.ஆர்.பார்திபன் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில் அவர், மொத்த திறன்மேம்பாட்டு மையங்களின் எண்ணிக்கை நாடு முழுவதிலும் மற்றும் தமிழகத்திலும் எவ்வளவு எனக் கேட்டிருந்தார். இதில் பலனடைந்தவர்கள் எண்ணிகையையும் கேட்டிருந்தார். இவற்றில் ஸ்டார்ட்அப் துவக்கியவர்கள் அரசால் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கையையும் கோரியிருந்தார்.

இதற்கு மத்திய சுயதொழில் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் திட்டம், பிரதான் மந்திரி கௌஷல் கேந்திரா உள்ளிட்டப் திறன்மேம்பாட்டு மையங்கள் 16,507 உள்ளன.

இவற்றில் 494 ஐடிஐகளில் உள்ளிட்ட 595 தமிழகத்தில் செயல்படுகின்றன. இவற்றில் பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 10.39 ஆகும். நாடு முழுவதிலும் 230,36 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

நவம்பர் 21, 2021 நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 2.94 லட்சம் விண்ணப்பதாரர்கள் சுயதொழில் செய்துள்ளனர். இதில் 24,445 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

மேலும், பிரதான் மந்திரி யுவா யோஜனா என்ற முன்னோடித் திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இது தொழில்முனைவோர் கல்வி, பயிற்சி, ஆலோசனை மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களில் நடைபெறுகிறது.

இவற்றை பெற்றவர்களிடம் அப்பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான சூழலை உருவாக்குகிறது. இதுவரை, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in