

முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிரானது என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கெமால் பாஷா கூறியது முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
கோழிக்கோடில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் முஸ்லிம் ஷரியத் சட்டம் பெண்களுக்கு எதிராக உள்ளது, இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கும் உரிமைகள் அதன் ஷரியத் சட்டத்தினால் முடக்கப்படுகின்றன, இது பெண் சமுதாயத்தின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக உள்ளது, இதனால் அனைவருக்குமான பொதுச் சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் நியாயம் இல்லை, உச்ச நீதிமன்றம் கூட இதில் தலையிட மறுத்து வருகிறது என்று பேசியுள்ளார்.
இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ள முஸ்லிம் குழுக்களும் கூட ஒன்று திரண்டு நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளன.
சன்னி முஸ்லிம் பிரிவினர் நடத்தும் சுப்ரபாதம் என்ற மலையாள நாளிதழ் தனது தலையங்கத்தில் நீதிபதியின் இந்தக் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதி பாஷாவின் கருத்து ஆர்.எஸ்.எஸ். கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது என்றும் முஸ்லிம் இருப்பின் மீதே கையை வைக்கிறது என்றும் அந்தத் தலையங்கம் சாடியுள்ளது.