உலகளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா தயார்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

உலகளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா தயார்: உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

உலகளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டை நேற்று வாஷிங்டனில் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியுள்ளதாவது:

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உலகளவில் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த நமது நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. இதற்கு உலக நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

ஜனநாயக நாடுகள், தங்கள்அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள மதிப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர்மோடி தனது உரையில் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஜனநாயக ஆட்சியின் நான்கு தூண்களாக உணர்திறன், பொறுப்புக்கூறல், பங்கேற்பு மற்றும் சீர்திருத்த நோக்குநிலை ஆகியவற்றையும் அவர் அப்போது எடுத்துரைத்துள்ளார் என்றுவெளியுறவுத் துறைத் தெரிவித்துள்ளது.

மேலும், ஜனநாயகத்தை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கும் தொழில்நுட்பத்தின் திறனைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிறுவனங்கள் திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களைப் பாதுகாப்பதில் பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in