Published : 14 Jun 2014 08:55 AM
Last Updated : 14 Jun 2014 08:55 AM
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கர்நாடகாவில் உள்ள மங்களூர், கார்வார், உடுப்பி, பெல்காம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மங்களூரில் அதிகப்பட்சமாக 132.5 மி.மீ. மழை பெய்ததால் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. அதேபோல பெல்காமில் பெய்த 56.5 மி.மீ.மழைக்கு ஒருவர் பலியானார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மைசூர், மாண்டியா, மடிகேரி, குடகு, ஷிமோகா, ஹாசன் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. பெங்களூரில் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிரம்பும் அணைகள்
தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள துணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, கபினி போன்ற பெரிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மாண்டியா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வாரத்தைக் காட்டிலும் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் 89.90 (மொத்த உயரம் 124.80 கன அடி) கன அடியாக இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 18,967 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 150 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஹேமாவதி அணைக்கு வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 14,153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்தால் இன்னும் சில தினங்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.
மேலும் கபினி அணைக்கும் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. இந்த அணைகள் நிரம்பினால் அதன் உபரி நீர் மேட்டூர் அணைக்கு அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கும் கர்நாட காவுக்கும் இடையே காவிரி மேலாண்மை வாரியம் குறித்த சிக்கல் நீடித்துவரும் வேளையில், தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்து இருப்பதால் இருமாநில விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT