Published : 10 Dec 2021 03:47 PM
Last Updated : 10 Dec 2021 03:47 PM

தேஜஸ்வி யாதவுக்கு டெல்லியில் திருமணம்; பாட்னாவில் தொண்டர்கள் கொண்டாட்டம்

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவின் திருமணம் டெல்லியில் நடைபெற்றது. இதனை பாட்னாவில் தொண்டர்கள் கொண்டாட்டி மகிழ்ந்தனர்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு, அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தம்பதிக்குப் ஏழு மகள்கள், இரண்டு மகன்கள் என மொத்தம் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.

லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப், தனியாக வாழ்ந்துவருகிறார். இவருக்கு 2018ம் ஆண்டு மே 12ம் தேதி ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் இந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது.

லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி. 2015-ம் ஆண்டு ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேஜஸ்வி துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 2 ஆண்டு காலம் அவர் துணை முதல்வராக இருந்தார். பிஹார் மாநிலத்தின் மிகவும் இளம் வயது துணை முதல்வராக இருந்தார்.

கடந்தாண்டு நடைபெற்ற பிஹார் மாநில தேர்தலில் தேஜஸ்வி கடுமையான பிரச்சாரம் செய்தார். கடுமையான போட்டிக்கு மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தேஜஸ்வி இழந்தார்.

இந்தநிலையில் தனது நீண்ட நாள் தோழியை தேஜஸ்வி யாதவ் இன்று திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடந்தது. தனது சிறு வயது தோழியும், ஹரியாணா தொழிலதிபர் மகளுமான ராகேல் ஐரிஸ் என்பவரை தேஜஸ்வி திருமணம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று காரணமாக கூட்டத்தை தவிர்க்கவே, ஒரு சிலர் மட்டும் திருமண நிகழச்சிக்கு அழைக்கப்பட்டனர்.

குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். லாலு குடும்பத்தினர் தவிர சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

சகோதரர் தேஜஸ்வியின் திருமண புகைப்படங்கள் சிலவற்றை தேஜ் பிரதாப்பும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தேஜஸ்வியின் திருமணம் நடந்ததை பாட்னாவில் அவரது கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x