Last Updated : 09 Dec, 2021 09:48 PM

 

Published : 09 Dec 2021 09:48 PM
Last Updated : 09 Dec 2021 09:48 PM

பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று காலை ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர்.

இந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியாகினர். விபத்தில் வருண் சிங் என்ற வீரர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த 13 பேரின் உடலும் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது.

இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் லக்பீந்தர் சிங் லிட்டர், ஸ்டாஃப் ஆஃபீஸர் லெஃப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் ஆகியோர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனையோரின் உடல்கள் அறிவியல் பூர்வாமாக அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி பாலம் விமானப் படை தளத்திற்கு கொண்டு வரப் பட்ட உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே, கடற்படை தளபதி சீஃப் அட்மிரல் ஆர்.ஹரி, விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x