Published : 09 Dec 2021 03:06 AM
Last Updated : 09 Dec 2021 03:06 AM

திருமண மேடையில் மணமகன் கண்ணெதிரே - உத்தரபிரதேசத்தில் மணப்பெண்ணின் நெற்றியில் திலகமிட்ட முன்னாள் காதலர்: எச்சரித்து அனுப்பிய மணப்பெண் வீட்டார்

திருமண மேடையிலேயே மணமகன் கண்ணெதிரே மணப்பெண்ணின் நெற்றியில் முன்னாள் காதலர் குங்குமத் திலகமிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அண்மையில் ஒரு திருமணவரவேற்பு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது மணப்பெண்ணுக்கு மாலையிட மணமகன் எழுந்து நின்ற வேளையில், முகத்தில் கைக்குட்டையால் மறைத்தவாறு ஒரு இளைஞர் மணமேடைக்கு வந்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் மணப்பெண்ணின் நெற்றியில் அவர் குங்குமத் திலகமிட்டார். இதனால் மணமகன், மணமகனின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்தஇளைஞரைப் பிடிக்க முயன்றனர்.ஆனால் அனைவரையும் தள்ளிவிட்டு அவர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் அனைத்தும் அங்குஎடுக்கப்பட்ட வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பின்னர் விசாரணை நடத்தியதில் அந்த மணமகளின் முன்னாள் காதலர்தான் அந்த இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. தனக்குத்தெரியாமல் காதலி ஏமாற்றிவிட்டாள் என்பதால் ஆத்திரமடைந்து தனது காதலை ஊரறியச் சொல்வதற்காக காதலியின் நெற்றியில் அவர் திலகமிட்டுச் சென்றசம்பவம் நடந்துள்ளது.

பின்னர் அந்த இளைஞரை, மணப்பெண்ணின் பெற்றோர் தேடிப் பிடித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலை எந்தவிதப் பிரச்சினையும் இன்றி திருமணம் சுமூகமாக நடந்தேறியுள்ளது. திருமண மண்டபத்தில் ஏராளமானோருக்கு முன்னிலையில் மணப்பெண்ணின் நெற்றியில் இளைஞர் திலகமிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x