ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து ரூ.41 லட்சம் கொள்ளை

ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து ரூ.41 லட்சம் கொள்ளை
Updated on
1 min read

ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து துணிகர திருட்டு ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா நகரில் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் ரூ.41 லட்சம் துணிகர திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் சிந்தகொம்ம திண்ணா கேஎஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி அருகே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இரவு திருடர்கள் புகுந்து அங்குள்ள சில கண்காணிப்பு கேமராக்களுக்கு கருப்பு பெயிண்ட் பூசி, ஏடிஎம்மில் இருந்த ரூ.17 லட்சத்தை திருடி சென்றனர். பின்னர், அடுத்ததாக ரிம்ஸ் மருத்துவமனை கூட்டு ரோட்டில் உள்ள மற்றொரு எஸ்பிஐ ஏடிம்மிலும் ரூ.24 லட்சத்தை திருடி சென்றனர்.

இது குறித்து செவ்வாய்க் கிழமை காலை, போலீஸாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் கடப்பா போலீஸார் சம்பவ இடங்களுக்கு சென்று மோப்ப நாயின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், முதல் திருட்டு நடந்த கேஏஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் ஒரு கார் முற்றிலுமாக எரிந்த நிலையில் காணப்பட்டது. ஒருவேளை இந்த காருக்கும், திருட்டு சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்ப்பு இருக்குமோ ? எனும் கோணத்திலும் போலீஸார் வழக்கு விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in