Last Updated : 08 Dec, 2021 06:14 AM

 

Published : 08 Dec 2021 06:14 AM
Last Updated : 08 Dec 2021 06:14 AM

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணி இல்லை: ராகுல் காந்தியுடன் சந்திப்புக்குப்பின் சஞ்சய் ராவத் திட்டவட்டம்

சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் ராகுல் காந்தியைச் சந்தித்தபின் பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ

மும்பை 


காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. 2 அல்லது மூன்று எதிர்க்கட்சி கூட்டணி இருப்பதால் என்ன பயன் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவி்த்தார்

சமீபத்தில் மும்பைக்கு பயணம் மேற்கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மாற்றாக தனி அணி உருவாக்கும் முயற்சியில் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவேசனா கட்சி்த் தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரைச் சந்தித்தார். அவரின் சந்திப்புக்குப்பின் சிவசேனாவின் நிலைப்பாடு மம்தாவின் முயற்சியை சிவசேனா ஏற்காது எனக் காட்டுகிறது.

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்றரா். அங்கு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்று மம்தா குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் ஊடகத்தினர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, “ ஐக்கியமுற்போக்குக் கூட்டணி என்பதே இல்லை” எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியையும் கடுமையாக மம்தா பானர்ஜி விமர்சித்துப் பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று சந்தித்துப் பேசினரார். இந்த சந்திப்புக்குப்பின் நிருபர்களுக்கு சஞ்சய் ராவத் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

ராகுல் காந்தியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து ஆலோசித்தேன். என்ன ஆலோசித்தேன் என்பதை உங்களிடம் இப்போது தெரிவிக்க முடியாது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் ஆலோசித்தபின் ஊடகங்களிடம் தெரிவிப்பேன்.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கான பணியை ராகுல் காந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் நான் கேட்டுக்கொண்டேன். காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி இல்லை. 2 அல்லது 3 எதிர்க்கட்சிக் கூட்டணிகள் அமைத்து என்ன செய்யப் போகிறோம்.

எதிர்்க்கட்சிக் கூட்டணி அமைப்பது குறித்துநான் எந்தத் தலைவரிடமும் பேசவில்லை. நான் சொல்வதெல்லாம் ஒரே ஒரு எதிர்க்கட்சிக் கூட்டணிதான் இருக்க வேண்டும். 2 அல்லது 3 எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி பாஜவுக்கு மாற்றாக அமைந்துவிடாது. எதிர்க்கட்சிகள் சேர்ந்தால்தான் பாஜவுக்கு மாற்று உருவாக்க முடியும்.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்தின் திட்டவட்டமான அறிவிப்பால், மம்தா பானர்ஜி தலைமையில் காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு சிவசேனா ஒத்துழைக்காது என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், சஞ்சய் ராவத் எழுதியிருந்த கட்டுரையில், “ காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து தனியாக எதிர்க்கட்சிகளைக் கொண்ட அணியை அமைக்க மம்தா பானர்ஜிமுயல்கிறார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x