Published : 07 Dec 2021 09:02 AM
Last Updated : 07 Dec 2021 09:02 AM

மும்பையில் இருவருக்கு ஒமைக்ரான் உறுதி: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் மகாராஷ்டிராவில் மட்டுமே 10 பேருக்கு தொற்று உள்ளது. மும்பையில் ஒமைக்ரான் தொற்று உறுதியான இருவருமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாவர்.

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த 295 பேரில் 109 பேர் எங்கு இருக்கிறார்கள் எனக் கண்டறியமுடியவில்லை என்று கல்யாண் டோம்பிவலி முனிசிபல் கார்ப்பரேஷன் தலைவர் விஜய் சூர்யவன்சி தெரிவித்துள்ளார். பலரின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், வீடுகள் பூட்டியிருப்பதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களைக் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்துதல் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவை தவிர குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது போலவே இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பரவல் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கரோனா பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது.

முகக்கவம் அணிவோம்; தடுப்பூசி செலுத்துவோம்:

தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வதும் தனிமைப்படுத்திக்கொள்வதும் அவசியம். பெரும் எண்ணிக்கையிலான பொதுக் கூடுகைகளைத் தவிர்ப்பதும் நல்லது. இயன்ற இடங்களிலெல்லாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அதற்கு வாய்ப்பில்லாதபோது முகக்கவசம் அணிந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதுமே உருமாறிய தொற்றுகளிலிருந்து பாதுகாப்பை அளிக்கும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்க நபர் மீது வழக்கு:

இதற்கிடையில், ஒமைக்ரான் பாதிப்பு இருந்தும் தென் ஆப்பிரிக்கா சென்ற நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதான மருந்து நிறுவன ஊழியர் கடந்த நவம்பர் 20ம் தேதி பெங்களூரு வந்தார். கெம்பே கவுடா விமான நிலையத்தில் அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது, கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள‌ ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரது அடுத்தகட்ட சோதனை முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. அதில் மருந்து நிறுவன ஊழியருக்கு நாட்டிலேயே முதல் முறையாக உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் அந்த நபரை தேடி நட்சத்திர விடுதிக்கு சென்றனர். ஆனால், அவர் கடந்த 27-ம் தேதியே தென் ஆப்பிரிக்கா சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x