Last Updated : 06 Dec, 2021 09:12 PM

 

Published : 06 Dec 2021 09:12 PM
Last Updated : 06 Dec 2021 09:12 PM

பிராந்திய பிரச்சினைகள்; ஆப்கன் விவகாரத்தை இந்தியா - ரஷ்யா கவனமாக கையாள்கிறது: பிரதமர் மோடி

பிராந்திய பிரச்சினைகள், ஆப்கன் விவகாரம் குறித்து இந்தியா - ரஷ்யா எப்போதுமே தொடர்பில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை குறித்து பேசிய பிரதமர் மோடி, "பிராந்திய பிரச்சினைகள், ஆப்கன் விவகாரம் குறித்து இந்தியா ரஷ்யா எப்போதுமே தொடர்பில் இருக்கின்றன. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவொருக்கொருவர் எவ்வித தயக்கமும் இன்றி உதவிக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் இரு நாடுகளுமே ஒருவொர் மற்றொருவரின் மிகவும் உணர்வுப்பூர்வமான நுணுக்கமான விஷயங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்தியா, ரஷ்யா நட்புறவு மாடல் பிரத்யேகமானது.

இன்று நமது வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்யாவின் சக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இது செயல்முறை ஒத்துழைப்புக்கு புதிய வழியை வகுத்துள்ளது. கிழக்கு பொருளாதார கூட்டமைப்பில் தொடங்கி இன்றைய விளாடிவோஸ்தக் உச்சி மாநாடு வரை நமது பிராந்திய ஒத்துழைப்பு இந்தியா - ரஷ்யா உறவை வலுப்பெறச் செய்துள்ளது" என்று கூறினார்.

ஏகே 203 துப்பாக்கி ஒப்பந்தம் கையெழுத்து:

முன்னதாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இந்திய ராணுவத்துக்காக ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயார் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. சுமார் 6 லட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்படும். இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப உதவிகளையும் செய்யும்.

உத்தரப் பிரதேசத்தின் அமேதிதொகுதியில் கோர்வா எனுமிடத்தில் அமைந்துள்ள அரசு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையில், இந்த நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இங்கு அதிக திறன் மிக்க 5 லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்கின்றன. அதிலிருந்து இப்போது அடுத்த கட்டமாக நவீன ஏகே-203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது. 7.62 மி.மீ. அளவிலான துப்பாக்கி தோட்டாக்களை வெளிப்படுத்தும் வகையில் அதிக திறன்மிக்கதாகவும், குறைந்த அளவாக5.56 மி.மீ. சுற்றளவைக் கொண்டவையாகவும் இவை விளங்குகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாகபயன்படுத்தப்பட்டு வரும் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக இவை இடம்பெறும். 300 மீட்டர் தொலைவு வரை எதிரிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x