Last Updated : 06 Dec, 2021 12:57 PM

 

Published : 06 Dec 2021 12:57 PM
Last Updated : 06 Dec 2021 12:57 PM

ஷியா முஸ்லிம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்துவாக மதம் மாறினார்

புதுடெல்லி

உத்தரப்பிரதேச ஷியா மத்திய முஸ்லிம் வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஜ்வீ இன்று காலை இந்து மதத்திற்கு மாறியுள்ளார். காஜியாபாத்தின் தாஸ்னா கோயில் மடத்தில் இந்துவானவரின் புதிய பெயர் ஜிதேந்தர் நாரயண்சிங் தியாகி என வைக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் அதிகமுள்ள ஷியா பிரிவின் முக்கியத் தலைவராகக் கருதப்பட்டவர் வசீம் ரிஜ்வீ. இதன் காரணமாக அவருக்கு உ.பி.யின் ஷியா முஸ்லிம் வஃக்பு வாரியத்தின் தலைவர் பதவியும் கிடைத்திருந்தது.

அப்போது முதல், ரிஜ்வீ, இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். பிரதமர் நரேந்தரமோடியையும் தொடர்ந்து பாராட்டி பேசியவர், அயோத்தி பிரச்சனையில் ராமர் கோயில் அங்கு கட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதுபோல், முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதால் சன்னி பிரிவு முஸ்லிம்கள் ரிஜ்வியை முஸ்லிம் அல்லாதவர் எனப் ‘பத்வா’ அளித்திருந்தனர். தாம் சார்ந்த ஷியா பிரிவு முஸ்லிம்களாலும் ரிஜ்வீயை வெறுக்கும் நிலை துவங்கியது.

இந்நிலையில், வசீம் ரிஜ்வீ இன்று காலை உ.பி.யின் காஜியாபாத் சென்றவர் அங்குள்ள மடத்தில் இந்துவாக மதம் மாறினார். மகாகால் தாஸ்னா கோயில் மடமான அதன் அதிபர் நரசிம்மானந்கிரி மஹராஜ் எனும் சாது மதமாறும் சடங்குகளை செய்து வைத்தார்.

அதிகாலை முதல் நடந்த இந்த மதமாற்ற சடங்கில் பல சாதுக்களும் கடந்து கொண்டனர். இச்சடங்கில் அவருக்கு பூணூலும் அணிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக தனது இந்துவாக புதிய பெயரை தாஸ்னா மடத்தின் அதிபதியான நரசிம்மாணந்த் கிரி முடிவு செய்வார் என வசீம் கூறியுருந்தார். அவரது விருப்பத்தின்படி சாது நரசிம்மாணந்த் ரிஜ்வீக்கு புதிய பெயராக ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி என பெயரிட்டார்.

தனது மதமாற்றத்திற்கு பிறகு ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி, காவி உடைகள் அணிந்தபடி தாஸ்னா கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தார். இவரை போல் இதுவரை முக்கிய முஸ்லிம்கள் எவரும் மாறியதில்லை என்பதால் இந்நிகழ்வு உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில தினங்களுக்கு முன் ரிஜ்வீ தாம் இறந்தால் உடலை முஸ்லிம் சடங்கில் புதைக்கக் கூடாது எனவும் மாறாக, இந்துக்களை போல் எரியூட்டப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

தனது மதமாற்றத்திற்கு பின் ஜிதேந்தர் நாராயண் கூறுகையில், ‘‘முஸ்லிம்களால் தூக்கி எறியப்பட்ட எனது தலைக்கு ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் ஒரு தொகை இனாமாக அறிவிக்கப்பட்டது. இதனால் நான் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்தேன்.

இனி நான் எனது இந்து மதத்தை நாட்டில் வளர்க்கப் பாடுபடுவேன். இந்துக்களுக்கு எதிராக வாக்களிக்கும் முஸ்லிம்கள் அரசியலில் தோற்க வைப்பேன்’ ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் ரிஜ்வீ, சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் திருக்குர்ஆனின் 26 பக்கங்களை நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு, ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது.

இதையடுத்து புதிய சர்ச்சையாக ரிஜ்வீ, ‘முகம்மது’ எனும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். இஸ்லாமியர்களின் கடைசி இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் வரலாறு இந்நூலில் எழுதப்பட்டிருப்பதாக வசீம் ரிஜ்வீ கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x