

உ.பி.யில் ஒவ்வொரு நாளும் நலிந்த பிரிவினருக்கு எதிராக தொடர்ந்து அட்டூழியங்கள் நடந்துகொண்டிருப்பதாக அம்பேத்கர் நினைவுதினத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 6) நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் நினைவுதினத்தை யொட்டி லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு மாயாவதி கூறியதாவது:
''மாநிலத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பல ஊடகங்களில் செய்திகளை நாம் பார்ப்பதில்லை.
நலிந்த மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் ஊடகங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசுக்குத் தெரியும்.
டாக்டர் அம்பேத்கர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை அவர்களால் மக்கள் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் ஆளும் மத்திய மாநில அரசுகளின் அக்கறையின்மைதான்.
மத்திய, மாநில அரசுகள் சாதிய மனப்பான்மையோடு இயங்குவதால்தான் நலிந்த மக்களுக்கு வழங்க அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.