

அசாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத் தலைநகரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது லக்கிமிபதார் கிராமம். இது நாகாலாந்தின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியாக உள்ளது. இங்கு இணையதள வசதி கிடையாது. அத்துடன், அடர்ந்த காடு என்பதால், அரசு அதிகாரிகளால் அவ்வளவு எளிதில் அந்தப் பகுதியை அடைவது கடினம்.
லக்கிமிபதார் கிராமம் மற்றும் அதை சுற்றிலும் உள்ள பல்வேறு பழங்குடியினத்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குகின்றனர். இந்நிலையில், பிரதமரின் வீடு தேடி தடுப்பூசி (ஹர் கர் தஸ்தக்) திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறை அதிகாரிகள் நர்ஸ்கள் கடந்த வெள்ளிக்கிழமை அந்த கிராமத்தை அடைந்தனர். அங்கிருந்த அகோனி சோனோவல் என்ற 107 வயது மூதாட்டிக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி செலுத்தினார். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
இதுகுறித்து சமூக சுகாதாரத் துறை அதிகாரி கரிஷ்மா போரா நேற்று கூறும்போது, ‘‘மூதாட்டிக்கு 80 வயது இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அவருக்கு 107 வயது என்று பிறகுதான் தெரிந்தது. அவருடைய மகனுக்கு தற்போது 75 வயதாகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அவர் பயப்படவில்லை. ஆனால், அவரது குடும்பத்தினர்தான் தயக்கம் காட்டினர். எனினும், மற்ற வர்களுக்கு முன்னுதாரணமாக மூதாட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டார்’’ என்று தெரிவித்தார்.