Published : 05 Dec 2021 05:22 PM
Last Updated : 05 Dec 2021 05:22 PM

காங்கிரஸ் கட்சி இல்லாத புதிய அணியை அமைக்கு மம்தா பானர்ஜி: சஞ்சய் ராவத் கருத்து

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

மும்பை

காங்கிரஸ் கட்சி இல்லாத புதிய அணியை அமைக்கும் முயற்சியில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார் என்று சிவசேனா கட்சியின் எம்.பி.யும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்றரா். அங்கு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்று மம்தா குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் ஊடகத்தினர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, “ ஐக்கியமுற்போக்குக் கூட்டணி என்பதே இல்லை” எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியையும் கடுமையாக மம்தா பானர்ஜி விமர்சித்துப் பேசினார்.

இந்நிலையில் சிவேசனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

மத்தியில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சி அல்லாத புதிய மாற்று அணியை உருவாக்க மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது, தனது தடத்தை திரிபுரா, மேகாலயாவிலும் பதி்க்க முயல்கிறது.

ஆதித்யா தாக்ரே உடனான சந்திப்பின் போது இரு மாநிலங்களின் கலாச்சாரங்கள் குறித்து மம்தா பானர்ஜி பேசினார். மே.வங்கத்தில் தொடங்க உள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருமாறு ஆதித்யா தாக்கரேவுக்கும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இரு மாநிலங்களுக்கு இடையே வரலாற்று ரீதியாக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு வலுப்பெறும் போது இளைய சமுதாயத்தினர் பயன் பெறுவார்கள். காங்கிரஸ் கட்சியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்து, ஐக்கியமுற்போக்குக் கூட்டணிக்கு இணையாக புதிய அணியை உருவாக்கி பாஜகவையும், பாசிஸ சக்திகளையும் எதிர்க்க மம்தா முயல்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை யாரெல்லாம் விரும்பவில்லையோ அவர்கள் குழப்பத்தையும், பின்னால் இருந்து பேசுவதற்கு பதிலாக தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்

இ்வ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x