

நாகலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, எதிர்பாராத இந்தத் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்க உறுதி செய்யப்படும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடம் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த மோன் மாவட்டத்தில், மியான்மருடன் எல்லைப் பகுதி ஆகும். இங்கு ஒரு நுண்துளை சர்வதேச எல்லையை மோன் மாவட்டம் பகிர்ந்து கொள்கிறது. இங்குதான் மியான்மருடன் தொடர்புடைய இந்தியாவின் பிரிவினைவாத இயக்கமான தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கே) வின் யுங் ஆங் பிரிவு மறைவாக செயல்பட்டு வருகிறது.
பிரிவினைவாத தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு வந்த பாதுகாப்புப்படையினர் தீவிரவாதிகள் என நினைத்து பொதுமக்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இதில் ஒரு வீரர் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறை அதிகாரிகளின் தகவல்படி, சனிக்கிழமையன்று, மோன் மாவட்டத்தில் ஓட்டிங் மற்றும் திரு ஆகிய கிராமங்களுக்கு இடையில், சில தினக்கூலி தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்திலிருந்து பிக்-அப் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் பற்றிய நம்பகமான உளவுத்துறையின் அடிப்படையில், நாகாலாந்து, மோன் மாவட்டம், திரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை நடத்த திட்டமிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமித்ஷா வேதனை
இந்த அசம்பாவிதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேதனை தெரிவித்துள்ளார்.
''நாகலாந்தில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும்"
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.