Published : 05 Dec 2021 07:57 AM
Last Updated : 05 Dec 2021 07:57 AM

மகாராஷ்டிராவில் முதல் ஒமைக்ரான் நோயாளி: தடுப்பூசி செலுத்தாமலேயே கப்பலில் பயணம்: மருத்துவக் குழுவினர் அதிர்ச்சி


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 33வயதான இளைஞர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் ஒரு தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை என்ற தகவல் மருத்துக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கப்பலில் பொறியாளராகப் பணியாற்றும் அந்த இளைஞருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேரம் கிடைக்காததையடுத்து, அவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தாமலேயே கடல்மார்க்கமாக அலைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த புதிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே 3 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிாாவின் தானே மாவட்டத்தில் 4-வதாக ஒரு இளைஞர் பாதிக்கப்பட்டார். 33 வயதான அந்த இளைஞர் தனியார் நிறுவனத்தின் கப்பலில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். தன்னுடைய பணிச்சூழல் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

மும்பை கல்யான் டாம்பிவ்லி மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

கல்யான்-டாம்பிவ்லி மாநகராட்சி பகுதியில் இந்த இளைஞர் குடும்பத்துடன் வசதித்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து துபாய் வழியாக டெல்லிக்கு வந்து அங்கிருந்து மும்பைக்கு வந்துள்ளார். மும்பைக்கு வரும்முன் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு பாஸிட்டிவ் என்பது உறுதியானது

தனியார் கப்பலில் பொறியாளராக அந்த இளைஞர் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமாக இருந்தபோது, மும்பையிலிருந்து கப்பலில் இந்த இளைஞர் புறப்பட்டார். அந்த நேரத்தில் தடுப்பூசி என்பது மிகக்குறைவாக முன்களப்பணியாளர்களுக்கும், முதியோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால் இந்த இளைஞரால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை.

இந்த இளைஞரும் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்த முயன்றும் முடியவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் துறைமுகத்தை விட்டு வெளியேற பல்வேறு கட்டுப்பாடுகள், கடுமையான நடவடிக்கைகள் இருந்ததால், அந்த இளைஞரால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை.

இதனால் கடந்த மாதம்வரை கப்பலிலேயே பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து இறுதியாக தென் ஆப்பரிக்கா வந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் சூழலைப் பார்த்து அந்த இளைஞரை சொந்த நாட்டுக்கு நிறுவனம் அனுப்பி வைத்தது. நீண்டகாலம் கடல் பயணத்திலேயே இருந்ததால், அந்த இளைஞரால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை. விமான டிக்கெட் பெற்று, விசாப் பெற்று இந்தியாவுக்கு வந்தபின் பரிசோதிக்கப்பட்டதில் அந்த இளைஞருக்கு கரோனா தொற்றும் மரபணுப்பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்றும் இருப்பது உறுதியானது.

உலகின் பல நாடுகளில் தடுப்பூசி கடந்த சில மாதங்களாக எளிதாகக் கிடைக்கும்போது, இந்த இளைஞர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தற்போது இந்த இளைஞர் கல்யான் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனியான ஒரு வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இந்த இளைஞரை அழைத்து வந்த வாடகைக் கார் ஒட்டுநரும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளார்.இந்த இளைஞர் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆனால், அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x