Published : 04 Dec 2021 11:19 AM
Last Updated : 04 Dec 2021 11:19 AM

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பின்னடைவு: இளைஞர் பிரிவுத் தலைவர் திடீர் விலகல்

மேகாலயா காங்கிரஸ் கட்சியில் கடந்த இரு வாரத்துக்கு முன் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் காங்கிரஸ் மாநில இளைஞர் பிரிவுத் தலைவரும் திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

மேகாலயா காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து தலைவர்கள் விலகி வருவதால் அந்தக் கட்சி மாநிலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேகாலயா காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ரிச்சார்ட் எம்.மாரக் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக தேசிய காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீவாசுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ரிச்சார்ட் எம்.மாரக் தனது கடிதத்தில் கூறுகையில், “தேசிய காங்கிரஸ் கட்சி செயல்படும் விதம் சமீபகாலமாக எனக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் கட்டமைப்பு ரீதியாகக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதைப் பலமுறை ஏராளமான தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், அதைச் சரிசெய்ய யாரும் தயாராக இல்லை.

ஆனால், யாரெல்லாம் குறைகளைச் சுட்டிக்காட்டினார்களோ அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முகுல் சங்மாவின் நெருங்கிய நட்பு கொண்டவரான ரிச்சார்ட் எம்.மாரக் தான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், முகுல் தனது தொகுதியான சாங்சக்கில் நடத்திய பேரணியில் ரிச்சார்ட் எம். மாரக் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர். 2023-ம் ஆண்டு மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து 17 பேரில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகும்.

கட்சித் தாவல் சட்டத்தின் கீழும் இந்த நடவடிக்கை வராது. மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறு ஒரு கட்சிக்குச் செல்லும்போது இது கட்சித் தாவல் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நல்ல நட்புடன் இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சியினரைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி இழுத்து வருவது இரு கட்சிகளுக்கும் இடையே பிளவை உருவாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேகாலயா மாநில காங்கிரஸ் தலைவராக வின்சன் ஹெச்.பாலாவை நியமிக்கும்போது தன்னிடம் ஆலோசனை நடத்தாமல் காங்கிரஸ் தலைமை செயல்பட்டது குறித்து முகுல் சங்மா, காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியுடன் இருந்தார். இங்கிருந்துதான் பிரச்சினை தொடங்கியது. 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தனர். 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்ததால், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் உருவெடுக்கும். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x