

தசைசிதைவு நோயால் பாதிக்கப்படு குழந்தைகளின் சிகிச்சைக்கு வரிவிலக்கு அளிக்க மக்களவையில் கோரப்பட்டுள்ளது. இதை பூஜ்ஜிய நேரத்தில் திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார் மத்திய அரசிடம் கோரினார்.
இது குறித்து தர்மபுரி மக்களவை தொகுதி எம்.பியான டாக்டர்.செந்தில்குமார் மக்களவையில் பேசியதாவது:
Muscular Dystrophy என்றழைக்கப்படுவது தசைசிதைவு நோய். அரிய வகை மரபணு நோயால், 3500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவு நோயினால் 800 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் அவதிப்படும் குழந்தைகள் இரண்டு வயதிற்கு முன்பே மரபணு பரிமாற்றம் சிகிச்சைக்கான ஊசி மருந்துகள் செலுத்தப்பட வேண்டும்.
இந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால் அக்குழந்தை உயிரிழக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. சிகிச்சைக்கு தேவையான ஊசி மருந்துகளின் விலை ரூ.16 கோடி ஆகும். மருந்துகளை வாங்க அவர்களது பெற்றோர்களுக்கு சாத்தியக்கூறுகள் குறைவு.
பெற்றோர்கள் நிதி திரட்ட உள்ள ஒரே வழி திறல் நிதி திரட்டல் (கிரவுட் ஃபண்டிங்) அனைவராலும் பணத்தை சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாது. கிரவுட் ஃபண்டிங்கில் நிதியினை திரட்டினாலும் ரூபாய் நான்கு கோடி ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜிஎஸ்டி வரியில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதினார். வரிவிலக்கு அவ்வப்போது என்றில்லாமல் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்.
இதனால் எல்லோருக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமை சரத்து 21 இல் சுகாதார மற்றும் ஆரோக்கியமாக வாழ உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
உடன்படிக்கைக்கு இணையான இந்திய காப்புரிமை சட்டத்தின்கீழ் கட்டாய உரிமை மருந்துகளின் விலையை வரம்புக்குள் உட்படுத்த வேண்டும். இத்துடன், வர்த்தக விலை சீரமைப்பு மூலமாகவும் அனைவருக்கும் மலிவான விலையில் மருந்துகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.