Published : 03 Dec 2021 11:44 AM
Last Updated : 03 Dec 2021 11:44 AM

ஒமைக்ரான்;மும்பை வந்த வெளிநாட்டு பயணிகள் 10 பேருக்கு கரோனா உறுதி

நவம்பர் 10 முதல் டிசம்பர் 2 வரை வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 சர்வதேச பயணிகளுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவிலும் எச்சரிக்கைப் பட்டியல் என அழைக்கப்படும் ஒமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அவர்களுக்கு கட்டாய பிசிஆர் பரிசோதனை அதில் நெகட்டிவ் வந்தால், வீட்டில் 7 நாட்கள் தனிமைக்குப்பின் 8-வது நாள் பிசிஆர் பரிசோதனை அதிலும் நெகட்டிவ் வர வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்தது.

ஒமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 6 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அதற்குள் கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மும்பை வந்த சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கோவிட் 19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது:

நவம்பர் 10 முதல் டிசம்பர் 2 வரை மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கோவிட் 19 இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x