புயல் எச்சரிக்கை எதிரொலி: பிரதமர் மோடி ஆலோசனை

புயல் எச்சரிக்கை எதிரொலி: பிரதமர் மோடி ஆலோசனை
Updated on
1 min read

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறி ஒடிசா கடற்கரையை டிசம்பர் 4-ம் தேதி நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயலால்வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகள் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றத் தயாராக இருக்குமாறு 13 மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பேரிடர் நிர்வாகம் குறித்து எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கோரியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி புயல் சூழல் குறித்துஉயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநர், வானிலை மைய இயக்குநர், உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். புயல் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடிகேட்டறிந்தார். புயல் தாக்க வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். மேலும், புயல் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்தும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கினர்.

- பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in