

வேலூர் நகரத்தில் வெளியூர் பயணிகள் தங்க ‘யாத்ரி நிவாஸ்’ விடுதி கட்டவும், காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிகளை துரிதப்படுத்ததும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதை மக்களவையின் திமுக எம்.பி.யான கதிர் ஆனந்த் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் கோரினார்.
இதுகுறித்து வேலூர் தொகுதியின் திமுக எம்.பி கதிர் ஆனந்த் மக்களவையில் பேசியதாவது: எனது மக்களவைத் தொகுதியிலுள்ள வேலூர் மாநகராட்சியின் நகரம் மிகமுக்கியமானது.
இங்குள்ள உலகப் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனைக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்கும் தேவை ஏற்படுகிறது.
ஆனால் நோயாளிகளுடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதில், கட்டணம் அதிகமாக இருப்பதாலும் அங்கே அறை எடுத்து தங்க முடியாதமையால், ஏழை எளியவர்கள் வேறு வழியின்றி நடைமேடைகளிலும், திறந்த வெளியிலும் தங்குவது வேதனையளிக்கிறது.
எனவே அவர்களின் நலனுக்காக 1000 பேர் தங்கும் வசதியுடன் ‘யாத்ரி நிவாஸ்’ எனும் பயணியர் தங்கும் விடுதி கட்டுவது மிகவும் அவசியம். காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா தொடங்க அனுமதி கிடைத்த பிறகும் பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி மெத்தனமாக உள்ளது.
எனவே, அதனை விரைவுப் படுத்தி, வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிலிருந்து வகுப்புகள் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவை இரண்டிற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.