Published : 02 Dec 2021 03:05 AM
Last Updated : 02 Dec 2021 03:05 AM

தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஒமைக்ரானிலிருந்து பெரும்பாலான இந்தியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்: வைராலஜி நிபுணர் ஷாஹித் ஜமீல் தகவல்

புதுடெல்லி

தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் ஒமைக்ரான் வைரஸிலிருந்துபெரும்பாலான இந்தியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இதுபற்றி அச்சப்பட வேண்டாம் என்றும் வைராலஜி நிபுணர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரும் பிரபல வைராலஜி நிபுணருமான டாக்டர் ஷாஹித் ஜமீல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த மார்ச் மாத வாக்கில் டெல்டா வகை கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில்2-வது அலை பரவியது. அப்போது, நாம்நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது பெரும்பாலானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவில்லை.

மேலும் ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும்4-வது சீரோஆய்வு நடத்தப்பட்டதில் 67 சதவீதம் பேருக்கு (சுமார் 93 கோடி)கரோனா வைரஸ் எதிர்ப்பு திறன் (ஆன்டிபாடிஸ்) உருவாகிஇருப்பது தெரியவந்தது. அதன்பிறகு கரோனா பரவல் கட்டுக்குள்வந்தது. இதனிடையே, தடுப்பூசிதிட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் அச்சுறுத்துகின்றனர்.

இதனிடையே, இதுவரை 120 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட சீரோ ஆய்வில், டெல்லியில் 97 சதவீதம் பேருக்கும் மும்பையில் 85 முதல் 90 சதவீதம் பேருக்கும் கரோனா எதிர்ப்புத் திறன் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, ஒமைக்ரான் அல்லது எந்தவகை வைரஸிலிருந்தும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக கரோனா தடுப்பூசி எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடைபெறுகிறது. ஒமைக்ரான் வைரஸுக்கு எதிரான கரோனா தடுப்பூசியின் செயல்திறன் சற்று குறைவாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால், இந்த தடுப்பூசி முற்றிலும் பயனற்றதாக இருக்காது. எந்த வகை கரோனா நோயின் கடுமையான தாக்கத்திலிருந்தும் இந்த தடுப்பூசி பாதுகாக்கும்.

எனவே, அனைவரும் 2 டோஸ் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்வதுடன் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைபிடித்தால் இதுபற்றி அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x