Last Updated : 29 Mar, 2016 10:02 AM

 

Published : 29 Mar 2016 10:02 AM
Last Updated : 29 Mar 2016 10:02 AM

ஜெ. மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது: வழக்கறிஞர் கட்டாராவின் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து, தீர்ப்பளித்து மாபெரும் தவறு. இந்நிலையில் இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, உச்ச நீதிமன்றம் தனது நேரத்தை வீணடிக்கக் கூடாது என வழக்கறிஞர் பண்டிட் பரமானந்த் கட்டாரா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இம்மனுவை நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில், தற்போது கர்நாடக அரசின் இறுதிவாதம் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரியா, 'ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்த தவறு. மறு சீராய்வு மனுவை மட்டுமே கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியும். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதும் சட்டத்துக்கு முரணானது ' என முறையிட்டார்.

அப்போது நீதிபதி பினாகி சந்திரகோஷ், ''இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய கோரிக்கைகளை ஊக்குவிக்க முடியாது. தேவைப்பட்டால் உங்களது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யுங்கள். அதை உச்ச நீதிமன்றம் விசாரித்து, முடிவை அறிவிக்கும்''என்றார்.

இதையடுத்து வழக்கறிஞர் பண்டிட் பரமானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஷிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் பரமானந்த் கட்டாரா, “குற்றவியல் நடைமுறைச்சட்டம் 394/401-ம் பிரிவின்படி 7 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளுக்கு உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால் ஜெயலலிதா தரப்பு 7 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றுள்ள நிலையில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 374 (2)-ம் பிரிவின்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உயர் நீதிமன்ற அதிகார‌ வரம்பை மீறி, வழக்கை விசாரித்து ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இந்த மாபெரும் தவறை கர்நாடக உயர் நீதிமன்றம் அறியாமல் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவுகளை தெரிவிக்காமல் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வழக்கை நடத்தி முடித்தது வேதனையளிக்கிறது.

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்தது சட்டத்துக்கு விரோதமானது. கர்நாடக‌ அரசு மற்றும் திமுக தரப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதும் முரணானது. ஏற்கெனவே லட்சக் கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் விசாரணை நீதிமன்றமே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி, இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கலாம் ''என்றார்.

இதைடுத்து நீதிபதிகள், ''ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுவை அந்த அமர்வுக்கு மாற்றுகிறோம். எனவே சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்குடன் உங்களது (பரமானந்த் கட்டாரியா) மனு இணைக்கப்பட்டு விசாரிக்க‌ப்படும்'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x