Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

ஒமைக்ரான் வைரஸ் பரவுவது நன்மையா? - சர்வதேச சுகாதார துறை வல்லுநர்கள் விளக்கம்

புதுடெல்லி

கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவுவது நன்மை பயக்கும் என்று சர்வதேச சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கரோனாவின் டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில்தென்னாப்பிரிக்காவில் புதிய வகைகரோனா வைரஸ் பரவுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்கள் காணப்படுகின்றன.

ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் உலக நாடுகளைஅச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

எனினும் சில சுகாதாரத் துறைவல்லுநர்கள் ஒமைக்ரான் வைரஸ்குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் கார்ல் கூறியதாவது:

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவினாலும், அந்த நாட்டில் வைரஸ்பாதிப்பால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.பெரும்பாலும் உயிரிழப்புஇல்லை.

தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை வைரஸ் வியாபித்து பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸால் டெல்டா வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பதால் ஒமைக்ரான் வைரஸை கிறிஸ்துமஸ் பரிசாக கருதுகிறோம். இந்த வைரஸ் பரவல் நன்மையில் முடியலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெல்ஜியத்தை சேர்ந்த வைரஸ் நிபுணர் மார்க் வான் கூறும்போது, "ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவுகிறது. ஆனால் பாதிப்புகள் குறைவாக உள்ளன. டெல்டா வைரஸ் இடத்தை ஒமைக்ரான் பிடிக்கும். இது நன்மையாக இருக்கக்கூடும்" என்றார்.

தென்னாப்பிரிக்க மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் ஏஞ்சலிக் கூறும்போது, "ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உடல்சோர்வு, தசை வலி மற்றும்இருமல் உள்ளது. மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பெரிய பாதிப்புகள் இல்லை" என்றார்.

ஆபத்தான வைரஸ்

சில சுகாதார வல்லுநர்கள் நேர்மையான கருத்துகளை கூறியுள்ள நிலையில் வேறு சிலர் ஒமைக்ரான் வைரஸ் குறித்து கவனமுடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் பிரண்டன் கூறும்போது, "ஒமைக்ரான் வைரஸை இதுவரை துல்லியமாக கணிக்க முடியவில்லை. மேலும் சில வாரங்கள் கடந்த பிறகே வைரஸின் வீரியத்தை கணிக்க முடியும். தடுப்பூசி போட்டவர்களையும் தொற்றுவதால் இது ஆபத்தான வைரஸ் என்றே கருதுகிறேன். எனவே ஆஸ்திரேலிய மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

"சர்வதேச அளவில் ஒமைக்ரான்வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கையாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x