Published : 30 Nov 2021 12:47 PM
Last Updated : 30 Nov 2021 12:47 PM

‘‘கசப்பான அனுபவம்; எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்கவில்லை: இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது’’- வெங்கய்ய நாயுடு

மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் வருத்தம் தெரிவிக்கவில்லை, எனவே இடைநீக்கம் ரத்து செய்யப்படாது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பினர். விதி 256ன் கீழ், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வீதி மீறப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடர்ந்து கூறியதாவது:

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இன்னும் நம்மில் பெரும்பாலோரை ஆட்டிப்படைக்கிறது. கடந்த கூட்டத்தொடரில் என்ன நடந்தது என்பது குறித்த கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், சபையின் முன்னணி தலைவர்கள் செயல்படுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தேன்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முறையீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நான் பரிசீலிக்க தயாராக இல்லை. ஆதலால் இடைநீக்கம் ரத்து செய்யப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x