Last Updated : 30 Nov, 2021 11:38 AM

 

Published : 30 Nov 2021 11:38 AM
Last Updated : 30 Nov 2021 11:38 AM

உ.பி.யில் திருமணமான ஓராண்டில் விவாகரத்து கோரி சராசரியாக 1500 வழக்குகள்

உத்தரப் பிரதேசத்தில் திருமணமான ஓராண்டில் விவாகரத்து கோரி சராசரியாக 1500 வழக்குகள் நீதிமன்றங்களில் குவிகின்றன. இவை, சில நாட்கள் முதல் ஓராண்டுக்குள்ளான இடைவெளியில் நடைபெற்ற திருமணங்கள் ஆகும்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதாகவும் அவை, ஏழேழு ஜென்மங்களுக்கான பந்தம் என்றும் கருத்துகள் உண்டு. இந்த நிலை மாறும் வகையிலான சூழல் உ.பி.யில் வேகமாக உருவாவதாகக் கருதப்படுகிறது.

இம்மாநிலத்திலுள்ள 75 மாவட்டங்களின் நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் பெருகத் தொடங்கியுள்ளன. நவீனமாக மாறும் காலத்திற்கு இணையாக மணமான தம்பதிகள் இடையே பிரச்சினைகள் ஏற்படுவது அதிகமாகிவிட்டது.

இச்சூழல் மணமானவர்களுக்குப் புதிதல்ல எனினும், இதற்கு முன் அவை வீடுகளின் நான்கு சுவர்களுக்கு உள்ளே தீர்க்கப்பட்டுத் தொடர்ந்தன. இதன் பின்னணியில் அத்தம்பதிகளின் சொந்தங்கள் பலமான காரணமாக இருந்தன.

தற்போது, சொந்தங்கள் அதிகமில்லாத குடும்பங்களில் வரன் தேடுவது அதிகமாகிவிட்டது. இதனால், சிறிய சண்டை, சச்சரவுகளும் பெரிதாகி விவாகரத்திற்கு நீதிமன்றப் படியேறுவது அதிகரித்துள்ளது.

இந்த நிலை, நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வருகிறது. இங்கு சராசரியாக ஓராண்டிற்கு சுமார் 1500 தம்பதிகள் நீதிமன்றங்களை அணுகுவது அதிகரிப்பதாகத் தெரிந்துள்ளது. இவர்களுக்கு மணமான காலகட்டம் சில நாட்கள் முதல் ஓராண்டு இடைவெளிக்குள் என அமைந்துள்ளதாக ஒரு சமூகநல அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இப்புள்ளிவிவரத்தின்படி, இந்த 1500 பேரில் 400 தம்பதிகள் காதலால் இணைந்தவர்கள். இவர்களது மோதலுக்கு அவர்களின் இடையே எழும் சந்தேகம் காரணமாக உள்ளது. இதன் இரண்டாவது எண்ணிக்கையில் மருமகள் மற்றும் மாமியாருக்கு இடையிலான மோதல்கள் காரணமாக அமைந்துள்ளன. இதில் இருவருக்குள் அடிதடி மோதல்களும் ஏற்படுவதாக அப்புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் லக்னோவின் மணமான தம்பதிகளுக்கான அரசு ஆலோசனை மையத்தின் பொறுப்பாளரான கமர் சுல்தானா கூறும்போது, ''மணமான சில தினங்களில் பிரியத் தயாராகும் தம்பதிகளும் அதிகரித்து வருகின்றனர். இவர்களது வயது 23 முதல் 28 என உள்ளது. இவர்களுக்கு அளிக்கப்படும் முறையான ஆலோசனையில் அதிகப் பலன் கிடைக்கிறது. இதுபோன்றவர்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லாததும் காரணமாகி விடுகிறது'' எனத் தெரிவித்தார்.

இதே அரசு மையத்தில் மருத்துவ ஆலோசகரான டாக்டர் அமித் கவுர் கூறும்போது, ''திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறுவதைப் பலர் புரிந்து கொள்கின்றனர். சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தம்பதிகள் அமர்ந்து பேசுவதால் பிரச்சினைகள் முடிவிற்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

உ.பி.யில் இதுபோன்ற காரணங்களால், குடும்ப நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களும், மனநல மருத்துவர்களும் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. விவாகரத்து மனுக்களை அம்மாநில நீதிமன்றங்களும் விரைந்து முடிக்காமல் வாய்தாக்களை அளிப்பதும் அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x