Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நடன இயக்குநர் சிவசங்கர் உடல் தகனம்

தமிழ், தெலுங்கு என மொத்தம் 10 மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனஇயக்குநராக பணியாற்றியவர் சிவசங்கர் மாஸ்டர் (72). சென்னையில் கடந்த 1948-ம் ஆண்டில் பிறந்த இவருக்கு சுகன்யா என்கிற மனைவியும், விஜய், அஜய் என்கிற மகன்களும் உள்ளனர்.

தமிழில் 1996-ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக, விஷ்வதுளசி (2003), வரலாறு (2006),உளியின் ஓசை (2008) ஆகியபடங்களில் பணியாற்றியதற் காக தமிழக அரசு சிறந்த நடன இயக்குநர் விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது.

மேலும், இவர் ஒன்பது ரூபாய் நோட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 30 திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் இவரது நுரையீரல் 75 சதவீதம் வரை பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் மாலை சிவசங்கர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதன் பின்னர் இவரது உடல் ஹைதராபாத் மணிகொண்டா பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி அருகே உள்ள மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இவரது மறைவுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நடிகர் தனுஷ், நடன இயக்குநர் லாரன்ஸ், நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண்உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x