Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

26 மாவோயிஸ்ட்களை சுட்டுக் கொன்ற சி-60 கமாண்டோ படையின் நடவடிக்கையை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்: மகாராஷ்டிர முன்னாள் டிஜிபி பிரவீன் தீக்ஷித் வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் 26 மாவோயிஸ்ட்களை சுட்டுக் கொன்ற சி-60கமாண்டோ படையின் நடவடிக்கையை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என அம்மாநில முன்னாள் டிஜிபி பிரவீன் தீக் ஷித் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் டிஜிபி பிரவீன் தீக் ஷித் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 12, 13 தேதிகளில் நடந்தஎன்கவுன்ட்டரில் 26 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த சி-60 கமாண்டோ படையினர், திட்டமிட்டு இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்தக் குழுவின் தலைமை சிறப்பாக, தந்திரமாக செயல்பட்டுள்ளது. வெற்றிகரமாக நடைபெற்ற இந்த நடைமுறையை, மற்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுத போலீஸ்படையினரும் அமல்படுத்தலாம்.

சி-60 கமாண்டோ படையினர் பல்வேறு தனித்தன்மைகளைக் கொண்டுள்ளனர். இது நாட்டில் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிற படைகளின் செயல்பாடுகளில் இருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. சி-60 கமாண்டோ படை மாவட்ட அளவிலானது ஆகும். இவர்கள் உள்ளூர்நிலப்பரப்பை நன்கு அறிந்திருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்தவர்களாகவும் உள்ளனர். இக்குழுவினர் காவல் துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அரசு மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் மாவோயிஸ்ட்களைப் பற்றிய தகவலை சேகரிப்பது சுலபமாக உள்ளது.

அடர்ந்த வனப்பகுதி உள்ளிட்ட எத்தகைய சூழ்நிலையிலும் பணிபுரியக்கூடிய வகையில் சி-60 கமாண்டோ படையினருக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை முகாம், ஹசாரிபாக்கில் உள்ள போலீஸ் பயிற்சி மையம், கான்கரில் உள்ள ஜங்கிள் வார்பேர் கல்லூரி உள்ளிட்ட நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்களில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவோயிஸ்ட்களை சரணடைய வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் இந்தப் படையினரின் முக்கிய பணியாக உள்ளது. இதற்காக, மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, சரணடைவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து இந்தப் படையினர் எடுத்துக் கூறுவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x