Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவக் கல்லூரியில் மொத்த முள்ள 400 மாணவர்களில் 281 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 2-வது நாளாக தார்வாட் மாவட்ட ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல் மற்றும் மருத்துவக் குழுவினர் கல்லூரியில் ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்து ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல் கூறும்போது, “கரோனா தொற்றுள்ள மாணவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறோம். இதுவரை 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 1,822 பேரின் சோதனை முடிவுகள் வரவில்லை” என்றார்.
இதனிடையே மைசூருவில் 2 நர்சிங் கல்லூரியில் 48 மாணவிகளுக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவிகளின் விடுதிகள் மூடப்பட்டு, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் அருகேயுள்ள தனியார் சர்வதேச உறைவிடப் பள்ளியை சேர்ந்த 40 மாணவர்களுக்கும், ஒரு ஆசிரியருக்கும் கரோனா பாதிப்பு நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஆனேக்கல்லில் ஸ்பூர்த்தி நர்சிங் கல்லூரியை சேர்ந்த 12 மாணவிகளுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று அவசர ஆலோசனை நடத்திய பிறகு கூறும்போது, ‘‘வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் மூலமாகவே கரோனா தொற்று பரவியுள்ளது. வெளிமாநில மாணவர்கள், கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும். கல்லூரிக்கு செல்வதற்கு முன் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல கரோனா வேகமாக பரவி வரும் தென்னாப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வருவோரும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் காண்பிக்க வேண்டும், கட்டாய தனிமையை கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT