Published : 27 Nov 2021 04:39 PM
Last Updated : 27 Nov 2021 04:39 PM

நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் ஒத்திவைப்பு: விவசாயிகள் அறிவிப்பு

கோப்புப் படம்

புதுடெல்லி

வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மத்திய அறிவித்துள்ள நிலையில் நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தும் திட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, இந்த 3 சட்டங்களையும் உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்த தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளிலேயே விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தும் திட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா நிறுத்தி வைத்துள்ளது.

அதேசமயம் எதிர்கால நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் கூட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

விவசாய சட்டம் வாபஸ் பெறப்பட்டாலும் விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தும் சட்டத்திற்கான கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்யுக்த் கிசான் மோர்ச்சா செய்தித்தொடர்பாளர் தர்ஷன் பால் கூறியதாவது:

திங்கள்கிழமை நாடாளுமன்ற நோக்கி அணிதிரளும் போராட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

லக்கிம்பூர் கெரி வன்முறை மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ரா இடைநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களையும் அரசின் முன்பு வைத்துள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம். டிசம்பர் 4 ஆம் தேதி மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x