Published : 26 Nov 2021 06:33 PM
Last Updated : 26 Nov 2021 06:33 PM

டிசம்பர் 15-ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து  தொடங்குகிறது

புதுடெல்லி

இந்தியா டிசம்பர் 15-ம் தேதி முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து வழக்கமான முறையில் மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நேரத்தில், கடந்த மார்ச் 2020 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடை 2021 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விமான சேவை நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக சிக்கிக் கொண்டு இந்தியர்களை அழைத்து வருவதற்காக இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் பழையபடி சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை தற்போது, இந்தியா சர்வதேச விமானங்களை இயக்குவதற்கான முயற்சியில் 25க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சர்வதேச விமான சேவைகள் விரைவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் இந்தியா டிசம்பர் 15-ம் தேதி முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கும் வெளியேயும் திட்டமிடப்பட்ட வணிக ரீதியிலான சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும்’’ எனத் தெரிவித்துள்ளது.

அதேசமயம் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாலும் கரோனா தாக்கம் அதிகம் உள்ள 14 நாடுகளில் இருந்து விமானங்கள் தற்போது இயக்கப்படாது எனத் தெரிகிறது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இருந்து விமானங்கள் இயக்கப்படாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x