

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் படைத்த இந்தியாவின் அக்னி 1 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் (வீலர் தீவு) உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து நேற்று காலை 9.15 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அக்னி 1 ஏவுகணை நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 700 கி.மீ அப்பால் இருந்த இலக்கினை வெறும் 9 நிமிடங்களில் தாக்கி அழித்தது. 12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ஏவுகணை, ஒரு டன் எடை வரையிலான ஆயுதங்களை எளிதாக சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமந்து செல்லும் எடையை குறைத்தால் அதன் தாக்கும் தூரம் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பமும் அக்னி 1 ஏவுகணையில் புகுத்தப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர், 27-ம் தேதி இதே ஏவுதளத்தில் இருந்து அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.