Last Updated : 24 Nov, 2021 08:52 AM

 

Published : 24 Nov 2021 08:52 AM
Last Updated : 24 Nov 2021 08:52 AM

முதல்முறையாக லக்னோ வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாநிலக் காவல்துறைத் தலைவர்கள், பாதுகாப்புப்படைத் தலைவர்களின் 3 நாள் தேசிய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இதற்காக, முதன்முறையாக லக்னோ வந்த தமிழக டிஜிபி சைலேந்தரபாபுவிற்கு அம்மாநிலத்தின் உயர் அதிகாரிகளாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தமிழர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்தியப் பாதுகாப்பு படைகளின் தலைவர்கள் மாநாடு இந்த வருடம் லக்னோவில் நடைபெற்றது. இம் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்திருந்தார்.

கடைசி இரண்டு நாட்களில் பிரதமர் நரேந்தர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டிற்கு தமிழகம் சார்பில் கலந்துகொள்ள கடந்த வாரம் வியாழக்கிழமை லக்னோ வந்த டிஜிபி சைலேந்திரபாபு நேற்று சென்னை கிளம்பிச் சென்றார்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பதவி ஏற்றது முதல் சைலேந்திரபாபு பல்வேறு கல்வி மேடைகளில் பேசுவதுடன் பல நூல்களும் எழுதியுள்ளார். இதில் அவரது கருத்துக்களால் கவரப்பட்டு பல மாணவ, மாணவிகள் யூபிஎஸ்சி தேர்வு எழுதி வருகின்றனர்.

இவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அதன் 25 வகையான குடிமைப்பணிகளின் பதவிகளை பெற்றுள்ளனர். இவர்களில் உ.பி.யில் பணியாற்றும் தமிழர்களும் உண்டு. இதனால், அவர்கள் உள்ளிட்டப் பலரும் டிஜிபி சைலேந்தரபாபுவை லக்னோவில் வரவேற்க வந்திருந்தனர்.

உ.பி. ஐஏஎஸ் அதிகாரிகளில், ஆயத்தீர்வை ஆணையரான சி.செந்தில்பாண்டியன், தொழில்துறையின் சிறப்புச் செயலாளர் எம்.முத்துகுமாரசாமி, அம்பேத்கர்நகர் மாவட்ட ஆட்சியரான சாமுவேல் பால்.என், சுகாதாரத்துறை இயக்குநர்

டாக்டர்.ராஜகணபதி மற்றும் நகர்ப்புறவளர்சித்துறையின் கூடுதல் இயக்குநர் ரீபா ராஜகணபதி ஆகியோர் வந்திருந்தனர்.

இவர்களுடன் உ.பி. மாநில விஜிலன்ஸ் டிஐஜியான எல்.ஆர்.குமார், ஆஸம்கரின் 20 ஆவது பிஏசி பட்டாலியன் கமாண்டரான என்.கொளஞ்சி ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவேற்பில் இடம் பெற்றிருந்தனர். உ.பி.யில் உயர் அதிகாரிகளாக சுமார் 40 தமிழர்கள் பணியாற்றுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அம்பேத்கர் நகர் மாவட்ட ஆட்சியரான சாமுவேல் பால்.எம் கூறும்போது, ‘எனது கல்லூரிக் காலம் முதல் சைலேந்திரபாபு சாரின் ஊக்குவிப்பால் நான் ஐஏஎஸ் பெற்றேன்.

என்னை போல், பலருக்கும் அவர் எடுத்த மாதிரி நேர்முகத்தேர்வில் பதிலளிப்பது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்துவகையான, ஆளுமைப்பயிற்சியை பலரும் பெற்றனர். அவரால் உருவான என்னைப்போல் பலரும் பணியாற்றும் இடத்தில் வருபவரை வரவேற்பதில் அனைவரும் மகிழ்கிறோம்.’ எனத் தெரிவித்தார்.

மூன்றுநாள் மாநாட்டிற்கு பின் நான்காவது திங்கள்கிழமை மாலை சைலேந்திரபாபு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். இதற்கு முன்பாக அவருக்கு லக்னோவில் மதியவிருந்து உ.பி. அதிகாரிகளான தமிழர்களால் அளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் சைலேந்திரபாபுவிற்கு ஜூனியராகப் பயின்ற சி.செந்தில்பாண்டியன் ஐஏஎஸ் செய்திருந்தார். இதிலும், தமிழர்களான உ.பி.யின் ஐஏஎஸ் அதிகாரிகளான அன்னாவி தினேஷ்குமார், இந்துமதி உள்ளிட்டப் பலரும் பங்கேற்று சைலேந்திரபாபுவுடன் உரையாடினர்.

டிஜிபி சைலேந்திரபாபு கருத்து

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தமிழக டிஜிபியான சைலேந்திரபாபு கூறும்போது, ‘எனது உரைகளை கேட்டு என் தம்பி, தங்கைமார்கள் பலரும் குடிமைப்பணி அதிகாரிகளாகி உ.பி.யிலும் பணியாற்றுவது மகிழ்ச்சியை தருகிறது.

கோவை வேளான் பல்கலைகழகத்தில் மட்டும் உ.பி.யின் சி.செந்தில்பாண்டியன், தமிழகத்தின் அமுதா முதல் தமிழக செய்தித்துறை இயக்குநரான வீ.ப.ஜெயசீலன் வரை பதவி பெற நான் அளித்த பயிற்சியும் உதவியுள்ளது.

உபி தமிழர்கள் அனைவரும் என்னை சந்தித்து தம் பணிகள், நிர்வாகத்திறன், சவால்கள் எனப் பலவும் பேசியதை அறிந்துகொண்டேன். அவர்கள் அனைவரிடமும் அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சியும் செய்யும்படி அறிவுறுத்தினேன்.’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யிலும் சைக்கிள் பயணம்

இதனிடையே, சென்னை ஐஐடியில் பயின்ற உ.பி.வாசியான ராஜேஷ் என்பவரின் ’லக்னோ பெடல்ஸ்’ எனும் அமைப்பினருடன் சேர்ந்து சைலேந்திரபாபு சைக்கிளில் சுமார் 60 கி.மீ பயணம் செய்துள்ளார்.

வாரணாசி சாலையின் பூர்வாஞ்சல் சாலையில் சென்று திரும்பியவர், இந்தியாவின் பெரிய எக்ஸ்பிரஸ்வேயான அதன் ஓரத்திலுள்ள ஒரு கடையிலும் தேநீர் அருந்தியுள்ளார் சைலேந்திரபாபு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x