

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடக்க உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது. மொத்தம் 20 வேலை நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரும் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி புதிய வேளாண் சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு வருகிற 28-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொள்கின்றன. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவார் என தெரிகிறது.
.