

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் மராட்டிய எழுத்தாளர் சுபாஷினி குக்டே (79). இவர் பல்வேறு சிறுகதைகளை எழுதி புத்தகமாக அச்சடித்துத் தயாராக வைத்திருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தனது புத்தகத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை இந்த நிகழ்ச்சி தள்ளிப் போடப்பட்டது. இந்நிலையில் பார்வைக் குறைபாடு, நுரையீரல் பிரச்சினை காரணமாக நாக்பூரிலுள்ள நியூ தாண்டே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) கடந்த 2 மாதங்களாக சுபாஷினி அனு மதிக்கப்பட்டிருந்தார்.
அவரைக் காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கைவிரித்தனர். இதையடுத்து, அவரது புத்தகத்தை, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், மேலவை உறுப்பினர் அபிஜித் வாஞ்சாரி, எம்எல்ஏ விகாஸ் தாக்ரே ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஐசியூ பிரிவில் டாக்டர்கள் அனுமதியுடன் வெளியிட்டனர். அதை ஆனந்தத்துடன் பார்த்தார் சுபாஷினி. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு மராட்டிய எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.