Last Updated : 21 Nov, 2021 10:33 AM

 

Published : 21 Nov 2021 10:33 AM
Last Updated : 21 Nov 2021 10:33 AM

இம்ரான்கான் என்னுடைய மூத்த சகோதரர்: சித்துவின் பேச்சுக்கு பாஜக, ஆம்ஆத்மி காட்டம்: காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு


பஞ்சாப், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கர்தார்பூர் சாஹிப் குருதுவாராவுக்கு சென்றபோது, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்னுடைய மூத்த சகோதரர் என்றுகூறியது சர்ச்சையாகியுள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவின் பேச்சுக்கு பாஜக, ஆம்ஆத்மி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குருதுவாரா தர்பார் சாஹிப்புக்கு நேற்று சென்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அங்கு வழிபாடு நடத்தினார். அப்போது கர்தார்பூர் திட்ட மேலாண்மை தலைமைநிர்வாக அதிகாரி முகமது லத்தீப் ஜீரோ பாயின்ட் பகுதியில் சித்துவை பிரதமர் இம்ரான் கான் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

அப்போது நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில் “ கர்தார்பூர் குருதுவாரா தர்பார் சாஹிப் இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய நட்புறவை திறக்கட்டும். இம்ரான் கான் என்னுடைய மூத்த சகோதரர். அவரின் வரவேற்பு எனக்கு மிகப்பெரிய கவுரவம், என்மீது அதிகமான அன்பு வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சித்து, இம்ரான் கானை மூத்த சகோதரர் என்று பேசியதற்கு பாஜக, ஆம்ஆத்மி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பாஜக தகவல் தொழி்ல்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் கூறுகையில் “ ராகுல்காந்திக்கு பிடித்த நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என அழைத்துள்ளார். கடந்த முறை பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வாவை கட்டித் தழுவி புகழ்தார் சித்து. ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருப்பவர்கள் பாகிஸ்தானை விரும்புவதில் ஏதேனும் வியப்பு இருக்கிறதா” எனத் தெரிவித்தார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில் “ சித்துவி்ன் பேச்சு இந்தியர்களுக்கு கவலையாக இருக்கிறது. காங்கிரஸார் இந்துக்களை புண்படுத்துகிறார்கள், ராகுல் காந்தி இந்துத்துவாவை விமர்சிக்கிறார், சித்து பாகிஸ்தான் பிரதமரை மூத்த சகோதரர் என்று தெரிவித்தார், ஏதோ மிகப்பெரிய வேலை நடக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தனது புத்தகத்தில் இந்துத்துவாவை போக்கோஹராம், ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டார். இன்னும் இந்தியாவில் ஒருதரப்பினரை திருப்திபடுத்தும்அரசியலைத்தான் காங்கிரஸ் கட்சி செய்கிறது, பாகிஸ்தானை புகழ்ந்தால் இந்தியாவில் ஒருதரப்பு மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. அவ்வாறு இந்தியாவில் யாருமில்லை.

இம்ரான்கானை மூத்த சகோதரர் என்று அழைத்த சித்து கடந்த முறை ராணுவத் தளபதி குவாமர் பஜ்வாைவை கட்டி அணைத்தார். பஞ்சாப் எல்லை ஓரம் இருக்கும் மாநிலம், அங்கு பாகிஸ்தான் தொந்தரவு கொடுக்கும். ஆதலால், முதிர்ச்சியான, தேசப்பற்று மிக்க தலைமை அங்கு தேவை. இந்தியாவுக்கு சரியான நபர் சித்து அல்ல, பஞ்சாபுக்கு அவரைவிட சிறந்தவர் தேவை” எனத் தெரிவித்தார்


காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இம்ரான் கான் யாருக்கு வேண்டுமானாலும் மூத்த சகோதரராக இருக்கட்டும், ஆனால், இந்தியாவுக்கு, ஐஎஸ்ஐ ராணுவம் மூலம் தீவிரவாதத்தை பரப்புபவர். ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதை மருந்துகளை பஞ்சாப்புக்குள்ளும், தீவிரவாதிகளுக்கும் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக அனுப்புபவர். பூஞ்ச் பகுதியில் வீரமரணம் அடைந்த, உயிர்தியாகம் செய்த சகோதரர்களை மறக்க முடியுமா “ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x