Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்கள் ரயில் பாதையை வெடிகுண்டு வைத்து தகர்த்ததால் அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டத்தில் ரிச்சுகுடா மற்றும் தேமு ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள ரயில் பாதையில் நேற்று அதிகாலையில் குண்டு வெடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் அந்த மார்கத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட்டனர். இதனால், பர்ககானா - ரார்வா இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலமு சரக டிஐஜி ராஜ் குமார் லக்ரா கூறும்போது, “ரயில் பாதையில் குண்டு வெடித்ததையடுத்து, மத்திய கிழக்கு ரயில்வேயின் தன்பாத் மண்டலத்துக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. சேதமடைந்த பாதையை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
இதுகுறித்து ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் பி.கே.மிஷ்ரா கூறும்போது, “குண்டுவெடிப்பில் ஒரு டீசல் இன்ஜினின் ட்ராலி சேதமடைந்துள்ளது. பர்ககானா மற்றும் பர்வாதி ரயில் நிலையங்களைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று, சேதமடைந்த பாதையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தேரி-ஆன்சோன்-பர்வாதி மற்றும் பர்வாதி-நெசுபோகோமோ சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர் பிரசாந்த் போஸ் (எ) கிஷான் தா, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவரது தலைக்கு ஜார்க்கண்ட் போலீஸார் ரூ.1 கோடி பரிசு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து 20-ம் தேதி (நேற்று) முழு அடைப்புக்கு மாவோ யிஸ்ட் அமைப்பினர் அழைப்பு விடுத் திருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT