Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
ஆந்திர சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் அவமானப்படுத்தியதாலும், அவரது வீட்டுப்பெண்களை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும் ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர சட்டப்ரேவையில் நேற்று முன்தினம், சந்திரபாபு நாயுடு குறித்தும், அவரது மனைவி உள் ளிட்ட வீட்டுப் பெண்கள் குறித்தும் சில அமைச்சர்கள் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால்வேதனையடைந்த சந்திரபாபுநாயுடு, “இனி முதல்வராக பதவியேற்ற பின்னரே சட்டப்பேரவைக்கு வருவேன்” எனக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போதும், சந்திரபாபு நாயுடு கதறி அழுதார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு நடந்த அவமானத்தையும், அவர் கண்ணீர் விட்டு கதறி அழுததையும் பார்த்து இதுவரை 5 தொண்டர்கள் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காகுளம் முதல் சித்தூர் வரை நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஜெகன் அரசை கண்டித்தும், எச்சரிக்கைகள் விடுத்தும் தர்ணா போராட்டங்கள், சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் முதல்வர் ஜெகன், அமைச்சர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதில் போலீஸார் தலையிட்டு தெலுங்கு தேசம் கட்சியினரை கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை இழிவாகபேசியும், அவரது வீட்டுப்பெண்களை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர்களையும், அவர்களை கட்டுப்படுத்தாத முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியையும் என்.டி.ஆர் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் நடிகர் பாலகிருஷ்ணா, அவரது சகோதரர் ராமகிருஷ்ணா மற்றும் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம், நாரா ரோஹித் ஆகியோர் ஜெகன் அரசை கண்டித்து பேசினர். “இனியும் இதுபோன்று நடந்துகொண்டால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்” என பாலகிருஷ்ணா எச்சரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT