

ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருக்கும் போதே, அமைச்சர்கள் கோடலி நானி, அம்படி ராம்பாபு, சத்யநாராயணா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி உள்ளிட்டோரை தரக் குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுககளை கேட்டதில்லை. எனது மனைவி மிகவும் நல்லவர். அவரது தியாகம் மேன்மையானது. எனக்காகவும், எங்கள் குடும்பத்திற் காகவும் இன்றளவும் உழைப்பவர்.
நான் மக்கள் பணியாற்றும் போதும், எனக்கு உறுதுணையாக நிற்பவர். அவர் குறித்து எப்படி இங்கு பேசலாம்? மேலும், எனது வீட்டுப் பெண்கள் பலர் குறித்தும் பல விதமாக பேசியுள்ளீர்கள். இது சரியல்ல என கண்ணீர் மல்க கூறினார்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு, “இதுபோல் கீழ்த்தரமாக நடந்துகொள்பவர்கள் இருக்கும் அவைக்கு நான் இனி வரமாட்டேன். அப்படி வந்தால் முதல்வராக தான் கால் பதிப்பேன் என கூறி வெளி நடப்பு செய்தார். அவருடன் தெலுங்கு தேச கட்சியினரும் வெளியேறினர்.
அவையிலிருந்து வெளியேறிய அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒரு கட்டத்தில் பேச முடியாமல் நா தழுதழுத்து, கண்ணீர் விட்டு, குலுங்கி, குலுங்கி அழுதார். இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்களுக்கு மாநிலம் முழுவதும் நேற்று தெலங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“எனக்கு தெரியாது” – ஜெகன்மோகன்
முதல்வர் ஜெகன்மோகன் கூறும்போது, “நான் அவைக்கு வரும் முன்பே அமைச்சர்கள் பேசிவிட்டதால், என்ன நடந்தது எனஎனக்கு தெரியாது. நான் வரும்போது, சந்திரபாபு நாயுடு பேசிக் கொண்டிருந்தார்” என்றார்.
“இன்று தான் மகிழ்ச்சி” - ரோஜா
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஜா கூறுகையில், “அவரவர் செய்த பாவ புண்ணியம், மீண்டும் அவர்களிடமே வந்து சேரும். சந்திரபாபுவின் ஆட்சிக்காலத்தில் என்னை படாத பாடு படுத்தினார். ஓராண்டு வரை பேரவைக்கு செல்லமுடியாத நிலையை ஏற்படுத்தினார். இப்போது அவையை விட்டுவெளியேறினார். இதனை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.