சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு; பம்பையில் நீராட அனுமதியில்லை

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு; பம்பையில் நீராட அனுமதியில்லை
Updated on
2 min read

கேரளாவில் மழை குறைந்துள்ள நிலையில் சபரிமலையில் இன்று பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும் பம்பை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து குறையாததால் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்படவில்லை.

மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் வரும் இந்த சீசனுக்கு கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகை தருவர். சபரிமலையில் மண்டல பூஜை சீசன் டிசம்பர் 26 வரை நீடிக்கும். பின்னர் மகரவிளக்கு விழாவுக்காக டிசம்பர் 30-ம் தேதி கோயில் திறக்கப்படும்.

2022 ஜனவரி 20 வரை தொடரும் மகர விளக்கு வழிபாடு தொடரும். பக்தர்கள் தரிசனம் செய்ய ஜனவரி 19 வரை அனுமதிக்கப்படும். டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும். ஜனவரி 14-ம் தேதி வரும் மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியிருத்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வரிசை முறை மூலம் தரிசனம் செய்து வருகின்றனர்.

கரோனா காலம் தவிர கேரளாவின் தெற்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்படும் என்ற பீதி காரணமாக பக்தர்கள் வருகை முதல் நாளில் குறைவாக இருந்தது.

இந்தநிலையில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால் தடை தொடர்கிறது.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in