Last Updated : 17 Nov, 2021 06:01 PM

 

Published : 17 Nov 2021 06:01 PM
Last Updated : 17 Nov 2021 06:01 PM

குருகிராமின் பொதுவெளியில் முஸ்லிம்கள் தொழுகைக்கு தடை விவகாரம்: தனது சொந்த இடத்தை அளிக்க முன்வரும் அக்ஷய் ராவ்

புதுடெல்லி

ஹரியாணாவின் குருகிராமின் பொதுவெளியில் முஸ்லிம்கள் தொழுகைக்கு தடை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் செல்டர் 12 இல் உள்ள தனது சொந்த இடத்தை இந்து மதத்தை சேர்ந்தவரான அக்ஷய் ராவ் அளிக்க முன் வந்துள்ளார்.

டெல்லிக்கு அருகிலுள்ள தொழில்நகரம் குருகிராம். இங்கு பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமையிலான சிறப்பு தொழுகை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கு வெறும் மூன்று மசூதிகள் இருப்பதன் காரணமாக அவர்கள் பொதுவெளியில் நடத்தி வருகின்றனர். இதற்கு கடந்த செப்டம்பர் முதல் தடை ஏற்படுத்தி வரும் இந்துத்துவாவினருடன் உள்ளூர்வாசிகளும் தற்போது இணைந்துள்ளனர்.

பொதுவெளி தொழுகைக்காக பாஜக ஆளும் ஹரியானாவின் குருகிராம் நகராட்சி சார்பில் 106 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இவை எதிர்ப்பின் காரணமாக 29 ஆகக் குறைத்தும் தொழுகை நடத்துவதில் சிக்கலாகி விட்டது.

இந்நிலையில், செக்டர் 12 பகுதியில் குருகிராம்வாசியான அக்ஷய் ராவ் என்பவருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இதில் அவர்ழமை முஸ்லிம்கள் தொழுகை நடத்த அளிப்பதற்காக முன் வந்துள்ளார்.

இந்த இடத்தில் சுமார் 25 முஸ்லிம்கள் வசதியாக தொழுகை முடியும் என அக்ஷய் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு உதவ முன் வந்துள்ள இவரது செயல் அப்பகுதியில் மதநல்லிணக்கத்தை வளர்ப்பதாகக் கூறி பாராட்டுக்களை பெறத் துவங்கி உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் குருகிராம்வாசியான அக்ஷய் ராவ் கூறும்போது, ‘தாம் வாழும் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது அங்கு குடியிருப்போரின் கடமை.

இதனால், எனது இடத்தின் மேற்கூரையில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி வழங்கத் தயாராக உள்ளேன். இங்கு அவர்களுக்கு தொழுகை நடத்த மாற்று இடம் அளிக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடன் முஸ்லிம் ஏக்தா மன்சின் அமைப்பாளரான ஹாஜி ஷெஹசாத் கான் கூறும்போது,‘‘எங்களுக்காக ஒரு இந்து சகோதரர் தனது இடத்தை தொழுகைக்காக அளிக்க முன் வந்திருப்பது பாராட்டத்தக்கது.

கடந்த சில வாரங்களில் செக்டர் 12 இல் முஸ்லிம்கள் தம் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்த முடியாமல் உள்ளது. இதற்கு சகோதரர் அக்ஷய் ராவின் அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

அன்பை வளர்ப்பவர்களான எங்களுக்கு சட்டம் ஒழுங்கை குலைப்பதில் உடன்பாடில்லை. இவரது செயல் முஸ்லிம்கள் இடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.’’ எனத் தெரிவித்தார்.

செக்டர் 12 உள்ளிட்ட மூன்று இடங்களில் தொழுகை நடத்த முடியாதபடி, தீபாவளிக்கு மறுநாள் வந்த வெள்ளிக்கிழமையில் கோவர்தன் பூஜை நடத்தப்பட்டது. இதில், பசு மாடுகளுடன் டெல்லி பாஜகவின் முக்கியத் தலைவரான கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.

கடந்த வார வெள்ளிக்கிழமையிலும் செக்டர் 12 மைதானத்தில் இந்து தரப்பினர் ஆக்கிரமித்தபடி அமர்ந்து வேர்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இச்சூழலில் வரும் வெள்ளிக்கிழமைக்காக அக்ஷய் ராவிடமிருந்து முஸ்லிம்களுக்கு நல்ல தகவல் கிடைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x